வேனிற் காலம்

இந்த ஆண்டு கோடை காலம் மிகக் கடுமையாகவே உள்ளது. வழக்கமாக இருப்பதை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றன. ஆனாலும் இந்த கோடையையும் கூடுதலாக ரசிக்க பல விஷயங்கள் நடந்தேறின.
இந்த கோடையின் ஆரம்ப நாட்களில் வெள்ளி மலைக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. பயணம் சற்றே சிரமமாக இருந்தாலும் இணை உள்ளங்களோடு  மலை வழிப் பயணம் என சுவராசியத்திற்கு குறைவில்லை.

 வழக்கமாக வெள்ளி மலையில் காலை நடை செல்லும் பழக்கம் உண்டு. இந்த முறை அமுதா அவ்வூரில் உள்ள குளத்தங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றார். சிறு சிறு குடியிருப்புகளை கடந்து சென்ற போது வெட்ட வெளியான மிகப் பெரிய நிலப்பரப்பு. விவாசய நிலம் சோளம் அறுவடை நடந்து முடிந்து காலியாக விடப்பட்ட நிலம் அதன் ஒரு பகுதியில் குளம் அதனோரத்தில் மிகப் பெரிய அரசமரம் அதனடியில் ஒரு பிள்ளையார் கோவில் . அந்த இடத்திற்கு போய்ச் சேரும் வரை மனதில் ஒன்றும் தோன்றவில்லை . அரசமரத்தடியில் நின்று வேனலின் விடியலில் அந்த நிலத்தின் முழுப் பரப்பையும் பார்த்த போது பொன்னென மினுங்கிக் கொண்டிருந்தன!.... தூரத்தில் குடியிருப்பில் எதையோ எரித்து கொண்டிருக்க அதில் புகையெழுந்து அந்த பொன்வெளியில் மேகமென தவழ்ந்து கொண்டிருந்தது. குளத்து நீர் ஆடியென அசைவிலாமல் இருக்க அழகிய பெண்ணொருத்தி மல்லாந்து படுத்திருப்பது போல் அங்கிருந்த மலைத் தொடரின் பிம்பத்தை காட்டிக் கொன்டிருந்தது . தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தின் நிழலில் தாத்தா ஒருவர் தன் மாடுகளை மேய விட்டு பார்த்து கொண்டிருந்தார் .... இந்த காட்சிகள் அனைத்தும் கண்ணிலும் மனதிலும் ஓவியமாக பதித்து கொண்டாலும் கைபேசியின்  கேமராவிலும் படம் பிடித்து கொண்டேன்.
வேனிற் கால ஆரம்பத்திலேயே அரச மரம் தன் இலைகளை உதிர்த்து விட்டிருந்தது.... கிளை நுனிகளில் மட்டும் செம்பழுப்பு நிறத்தில் துளிர்த்த இலைகள் துடித்துக் கொண்டிருத்தன. எனக்கு எப்பொழுதும் அரச மரத்து இலைகள் காற்றிலாடுவது பரவசங் கொள்ளச் செய்யும் ... நதி நீரின் ஓசையை ஒத்திருக்கும் அதன் ஒவ்வொரு இலையும் தனித்தனியாக அசைவது பட்டாம்பூச்சிகளால் சூழ்ந்த மரம் என்றே மயங்க வைக்கும். அப்படி மயங்கி கொண்டிருக்க அத்தளிர்களின் இடையிடையே சூறைக் குருவிகளும்  அங்கொன்றும் இங்கொன்றுமாக பறக்கவும் அமரவுமாக இருந்தன. பிரம்மாண்ட அளவிலான அடிமரத்தை பார்த்த பொழுது என்னவென்று சொல்ல இயலா வண்ணம் நெஞ்சு விம்மி எழுந்து அடங்கியது . அத்துனை பெரிய அடிமரத்தை கண்டவுடன் இயல்பாகவே கட்டி அணைக்க தோணுகிறது. ஆச்சியும், ஐயமையும் நினைவிலெழ அவர்களின் கனவினாலே இன்று இத்தருவின் நிழலில் நான் என கண்களில் நீர்  திரள சிரித்துக் கொண்டிருந்தேன். நண்பர்கள் சூழ இருந்தும் நான் தனித்து நின்றிருந்தது போல் ஓருணர்வு... மனமும் அக்கணத்தில் தனிமையை மட்டுமே  விரும்பிக் கொண்டிருந்தது . அந்நேரத்தில் சட்டென குண்டு கரிச்சானின் குரல் கேட்டு தேட குளத்தின் கரையில் உள்ள சிறு செடியில் அமர்ந்திருந்த ஒரு குட்டி குண்டு கரிச்சான் பாடிட்டு இருந்தான் . அவனும் நிலத்தில் இறங்கவும் செடியில் அமரவும் மாறி மாறி பறந்து  கொண்டிருந்தது ... அங்கிருக்கும் ஒவ்வொன்றும் வேனிலை என்னுடன் கொண்டாடிக் கொண்டிருந்து .

சிறிது நேரத்தில் ஆடிப்பரப்பாக விரிந்திருக்கும் குளத்தின் மேல் என் கவனம் குவிந்தது. அங்கு நீர் பரப்பின் ஓரத்தில் அழுத்தமாக பாசி ஓவியம் போல் படர்ந்திருந்தது . அதில் நீர் பூச்சிகள் ஓவியம் கலையாமல் நடனமிட்டுக் கொண்டிருந்தன. எனக்கு இதைப் பார்க்கும் போது பிஜு மகராஜின் நடனம் தான் நினைவில் எழுந்தது ... பிஜு ஜி நடனமாடும் போது கால்கள் தரையில் பாவியிருக்கிறதா இல்லை மிதந்து கொண்டிருக்கிறதா?  என ஐயமேற்படும். ஒரு பூ மலரும் அமைதியுடன் நளினமாகவும் இயல்பாகவும் சுழன்று கொண்டிருப்பார்., நீர் பூச்சியின் நடனமும் அப்படியே ஓவியம் கலையாது நடனத்தை நிகழ்த்தி கொண்டிருந்தது . குளத்தில் ஆங்காங்கே மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன .. இரைக்காக வாய் பிளந்து காந்திருந்த ஒரு தண்ணீர் பாம்பையும் பார்க்க நேர்ந்தது. அங்கிருந்த
 நிலம் முழுவதும் காய்ந்த மாட்டுச் சாணமும், சோளத்தட்டும் ,சக்கைகளும், காய்ந்த அரச மர இலைகளும் பரவி  இருந்ததே அந்திலத்தின் பொன் நிறத்தை மெருகூட்டியிருந்தது.  அப்பொழுதில்  வெவ்வேறு திசைகளிலிருந்து வந்த பறவைகளின் குரலைக் கேட்ட போது  அச்சூழலுக்கு உகந்த ஒரு பாடலை  இணையத்தில் தேடி எடுத்து வாசிக்க தோணியது.

நின்ற சொல்லர்; நீடு தோன்று இனியர்;

என்றும் எமக்குத் தம்பரம் ஆகிய

அன்புடைத் தோழி! கேளாய்; பொங்கிக்

கடல்பெயர்பு அற்றே புள்ளி நுண் துளி

வண்டுபடு நறவம் மலரும்

தண்தழை முடுக்கர் மலைகிழ வோற்கே. "

 

கபிலரின் இந்தப் பாடலோடு அந்த நிலத்தினை மீண்டுமொரு முறை கண்ணுக்குள் பதிய வைத்துக் கொண்டு தங்குமிடம் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.


பதினைந்து நாட்கள் இடைவெளியில் இருமுறை வெள்ளி மலை போய் வந்ததில் சிறிது நாட்களுக்கு பயணமேதும் திட்டமிடக்கூடாது எனக்கு நானே ஆணையிட்டு கொண்டேன். கோடையும் கடுமையாக தொடர, நினைத்தாலும் போக உடல் ஒத்துழைக்காது என்ற நிலையும் உருவாகி வந்தது . எனது கணவருக்கும்  அவரது தொழில் ரீதியாக தினமும் நகரின் புறநகர்ப் பகுதிக்கு பயணம் செய்ய வேண்டி மதிய உணவை உடன் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையிருந்ததது . அதனால் வழக்கமான காலை நடை சென்று வந்து  சமையல் வேலைகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. மாலை நேரங்களில் நான் நடை செல்லும் பகுதி போக்குவரத்து அதிகமாக இருக்குமாதலால் வீட்டின் மொட்டை மாடியில் நடக்கலாம் என முடிவெடுத்திருந்தேன்.

காலை நடை செல்லும் போது சூரிய உதயம், தூரத்தில் தெரியும் மலைத்தொடர்கள், பறவை பார்த்தல் என பல இனிய அனுபவங்களும் கிடைக்கும் . மொட்டை மாடியில் நடை செல்லாம்  என நினைத்த போது இந்த அனுபவங்களை துறக்க நேரிடுதே  என்ற வருத்தம் இருந்தது... ஆனால் எல்லா இடங்களிலும் இனிமையுண்டு நமக்குதான் பார்க்க கண்கள் இல்லாமலாகிறது என்பது புரிய வந்தது. 

இந்த ஏப்ரல் மாதத்தில் மதுரையில் மாலை ஐந்து மணி வரை வெயில் வெளுத்து வாங்கியது . நான் ஐந்தரை மணிக்கு மேல்  நடை செல்ல ஆரம்பித்தேன் . அந்நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மெலிதாக காற்று வீசத் தொடங்கியிருக்கும் .  ஆறு மணிக்கு மேல்  மேற்கில் வானம் சிவக்கத் துவங்கும், மேகங்களின் விளிம்புகள் பொன்னென பொலிந்து கொண்டிருக்கும் . அந்நேரத்தில் மனம் அநாயசமாக வானத்தின் மீது குவியத் தொடங்கும்...... 
வானத்தை நோக்கும் போதெல்லாம் முடிவற்ற பெருவெளி ஏற்படுத்தும் ஒரு வெறுமை வந்து கவியத் தொடங்கும் ..... தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கும் போது அப்பெருவெளியில் சிறு சிறு விஷயங்களை கண்டடையத் தொடங்கி மனம் அந்த வெறுமையை களையச் செய்யும்.... எத்துனை பிரம்மாண்டத்தையும் மனிதன் தன் அகத்திற்கு ஏற்றவாறு உருவகித்து கொள்ள எடுக்கும் பிரயத்தனமே மகிழ்ச்சி அல்லவா? ஒவ்வொரு நொடியும் அதற்கு முயன்று கொண்டே இருக்கிறான்.

ஒரு சில நாட்களில் வானம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு துளி மேகமுமின்றி விளிம்பில்லா நீல விரிப்பால் போர்த்தியிருக்கும் அழகு மனதினை மோன நிலைக்கு இட்டுச் செல்லும் ஒரு சில நொடிகளில காற்று எங்கிருந்தோ மேகங்களை இழுத்து வரும்... அந்தியும் அணையத் தொடங்க வானம் பல நூறு  மேகத் தூரிகைகள் கொண்டு ஆயிராமாயிரம் வண்ண ஓவியங்கள் வரையத் தொடங்கும் . அந்நேரத்தில் நான் என் இயர் ஃபோனில்  மொசார்ட்டின் சிம்பொனியை ஒலிக்க விடுவேன் ... முடிவிலா ஓவியத்திலும், மொசார்ட்டின் இசையிலும் என்னை தொலைத்து உறைந்து நடப்பதை நிறுத்தியிருப்பேன்.
 இசையும் , இயற்கையும் எனக்களிக்கும் ஆன்மீக உணர்வினை சொல்ல நான் தேர்ந்தெடுத்த மொழி கண்ணீரும் , மௌனமுமாகவே இருக்க முடியும்!

"இப்படியே வானத்தை பார்த்து பொங்கியது போதும்" என நனவு மனம் எச்சரிக்க தொடங்குவதை கவனித்து நடக்க ஆரம்பிப்பேன் . ஒவ்வொரு திருப்பத்திலும் முதலில் வரையப்பட்ட ஓவியம் அழிக்கப்பட்டு புதியதோர் ஓவியம் வரையப்பட்டுக் கொண்டே இருக்கும்... முடிவில்லா ஒரு ஆர்ட் கேலரி ஷோ வினை பார்த்தபடி நடந்து கொண்டிருப்பேன். அந்தி அணைந்த பின் வெள்ளி முளைத்து வருவான்.... அடுத்த திருப்பம் முடிந்து வருகையில் உச்சியில் வியாழனும், அரைச் சந்திரனும் வந்திருப்பார்கள் .

ஒன்றரை மாதமாக மொட்டை மாடியில் ஒரு மணி நேர  நடையின் போது அந்தி அணையும் காட்சிகளுடன்  மொசார்ட்டும், ராஜாவும், ரகுமானும் வேனிற் கால நாட்களை அனலும, வசந்தமுமாக கொண்டாட வைத்தனர். ஒரு சில நாட்கள் இந்த ஓவியங்களை படம் பிடிக்கவும் முயற்சி செய்வேன் .... அது பிரம்மாண்டத்தின் ஒரு துளியாக வியர்த்தமாகி நிற்கும் அழகினை புன்சிரிப்போடு பார்த்துக் கொள்வேன் . அன்றாடங்களில் சலிப்பு ஏற்படுவதே பழக்கமெனும் பாசி தான் என்றாலும் இவ்வினிய பழக்கங்கள் அன்றாடங்களை பொலியச் செய்து விடுகின்றன. இதை முடிக்கும் தருவாயில் தேவதேவனின் வரிகள் நினைவில் எழுந்து வந்தன!

எப்போதாவது நிகழும்
 நன்மைகள் குறித்து
மகிழ்ச்சி அடைகிறோம்........


எப்போதாவது நிகழும்
 இந்த அழகினையும் காதலையும்
நன்மைகளையும் கண்டு கொண்ட
கவிதைகளும் கவிஞர்களும் வாசகர்களும்தான்
எவ்வளவு குறைவானவர்களாய் இருக்கிறார்கள்
அவர்கள் அதிலேயே நிறைவு பெற்றவர்களாய்
பிறர் மீதும் தன் மீதுமே அக்கறையற்றவர்களாய் ?
கவிதையின் மதத்தை 
நாம் ஏன் கண்டுகொள்வதேயில்லை?



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

கர்நாடகா பயணம் - 4