மதுரை, விருதுநகர் போன்ற வறட்சியான இடங்களிலிருந்து வந்த எங்களுக்கு குளுமையான பருவநிலையும், காவேரி ஆற்றின் தண்ணீரும் எங்களை உற்சாகமாக பயணிக்க வைத்தது. 15 நிமிட பயணத்திற்கு பிறகு டுபாரே யானைகள் காப்பகத்திற்கு வந்து சேர்ந்தோம். காவேரி ஆற்றங்கரையில் டுபாரே யானைகள் காப்பகம் அமைத்திருந்தது. மற்ற இடங்களைப் போல் அல்லாமல் இங்கு ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியதும் , சிறியதுமான பாறைகளில் நீர்ப் பெருக்கு மோதி நுரைத்து வெண்ணிறமாக காவேரி வழிந்தோடிக் கொண்டிருந்தாள். நதியின் ஆழத்தில் நீரில் தோய்ந்து உருண்டு சிறுத்த கூழாங்கற்கள் சிரித்துக் கொண்டிருந்தன. மக்கள் வெள்ளத்தோடு நதியின் பேரோசையும் எங்களை அன்போடு வரவேற்கும் உணர்வை அடைந்தேன். இங்கு படகு சவாரியும் இருந்தது. ஆனால் யானைகள் காப்பகத்திற்குச் செல்ல காவேரி ஆற்றினை நடந்து கடக்க வேண்டியிருந்தது. படகு சவாரிக்கு டிக்கெட் எடுக்க கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் அதை தவிர்த்து விட்டு காவேரியை கடக்க ஆற்றிற்குள் இறங்கினோம். ...
கருத்துகள்
கருத்துரையிடுக